Saturday, 3 April 2021

Muruga - 11 Faces - Kundukarai, Ramanathapuram,Tamil Nadu 623501, India

 11 முகம் கொண்ட அதிசய #முருகன்


அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், குண்டுக்கரை, இராமநாதபுரம்


சூரபத்மனை வதம் செய்வதற்கு முன்பே முருகன் இத்தலத்துக்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது முருகனுக்கு 11 தலை 22 கைகள் இருந்ததாக தல வரலாறு சொல்கிறது. அதே வடிவில், விஸ்வரூபம் எடுத்த நிலையில் முருகன் தரிசனம் தருகிறார். மற்ற கோயில்களில் எல்லாம், பிரணவ மந்திரத்தின் பொருள் கூற, முருகன் சிவனின் மடியில் அமர்ந்திருப்பது போல சிலை இருக்கும். ஆனால், இத்தலத்தில் தகப்பன் சுவாமியான முருகன் குன்றின் மீது அமர்ந்து பிரணவ மந்திரத்திற்கு பொருள் சொல்ல, சிவன் அதை நின்று கேட்கும் நிலையில் அமைந்துள்ளது. முருகனே சிவன், சிவனே முருகன். இருவரும் ஒருவரின்றி வேறில்லை என்பதற்கேற்ப இங்கு தகப்பன் சுவாமி குன்றின் மீது அமர்ந்து அருள்பாலிப்பது மிகச்சிறப்பான அம்சமாகும்.


300 ஆண்டுகளுக்கு முன் ராமநாதபுரத்தில் வாழ்ந்த பாஸ்கர சேதுபதி குண்டுக்கரை முருகன் கோயிலுக்கு தினமும் வந்து வழிபாடு செய்வார். ஒருமுறை இவர் சுவாமிமலை சென்று தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்தபோது, இவரது கனவில் சுவாமிமலை முருகன் தோன்றி, குண்டுக்கரை முருகன் கோயிலில் உள்ள பழைய முருகன் சிலையை எடுத்து விட்டு புதிதாக முருகனை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால் உனக்கும், உனது மக்களுக்கும் நன்மை உண்டாகும் என கூறி மறைந்தார். ராமநாதபுரம் வந்த பாஸ்கர சேதுபதியும் கனவில் முருகன் கூறியபடி குண்டுக்கரை சென்று அந்த கோயிலிலிருந்த பழைய முருகன் சிலையை அகற்றி விட்டு புதிதாக முருகன் சிலை பிரதிஷ்டை செய்தார். சுவாமிமலையானின் பெயரான சுவாமிநாதன் என்று பெயர் சூட்டினார்.

இந்த தலத்தின் பெயரே குண்டுக்கரை. பெரிய தீர்த்தக்குளமாக இருந்த இடத்தில் பெரிய கரையுடன் இருந்ததால் குண்டுக்கரை என்று பெயர் ஏற்பட்டது. நாளடைவில் தீர்த்தக்குளம் மாசுபட்டு பராமரிக்கப்பட முடியாமல் போனதால் அதை ஆகம விதிப்படி மூடி விட்டனர்.

7 அடி உயர துர்க்கை அம்மன்

இந்த தலத்தில் 18 கைகளுடன் 7 அடி உயரத்தில் உள்ள துர்க்கை அம்மன் அருள்பாலிப்பது மிகவும் சிறப்பு. இந்த துர்க்கை அம்மன், துர்க்கை லட்சுமி, சரஸ்வதி ஆகியவற்றின் கலந்த அம்சமாக பரிமளிப்பதாக கூறுகின்றனர். செவ்வாய், வெள்ளியன்று தீபம் ஏற்றி வழிபட, கல்வி அபிவிருத்தி, செல்வ வளம், நல்ல ஆரோக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.

இங்கு விநாயகர், தஷிணா மூர்த்தி, நவகிரகங்கள், சிவ பார்வதி, வீரபாகு, பைரவர், அருணிகிரிநாதர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

இங்கு முக்கிய விழாக்களாக சித்திரை மாதம் முதல் தேதியில் பூச்சொரிதல், நவராத்திரி, தைப் பொங்கலின் போது சாகம்பரி என்று காய்கறி பழங்களுடன் அம்மனுக்கு அலங்காரம், வைகாசி விசாகம், சஷ்டி, சூரசம்ஹாரம், திருக்கார்த்திகை, தைப்பூசம் மற்றும் தமிழ், ஆங்கில வருடப் பிறப்பு சிறப்பு பூஜைகள் நடைபெறும். குறிப்பாக திருச்செந்தூருக்கு அடுத்த படியாக இங்கு சூரசம்ஹாரம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையும் மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை, இரண்டு வேளை பூஜைகளுடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது இந்த திருத்தலம். இந்த கோவில் சிவகங்கை சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் ஆர்.பி.கே.ராஜராஜேஸ்வரி நாச்சியார் நிர்வாகத்தின் கீழ் அழகாகவும் சுத்தமாகவும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு குருக்களாக பணிபுரிந்து வரும் ராமலிங்க குருக்கள் வரும் பக்தர்களுக்கு அழகான, கம்பீரமான, ஸ்பஷ்டமாக, சுதி சுத்தமாக சுலோகங்களை கூறி பூஜைகள் செய்து வருகிறார்.

இது இங்கு வரும் பக்தர்களுக்கு நல்ல உற்சாகத்தையும் ஆன்மீகத்தையும் பெருகச் செய்கிறது.

சிறப்பம்சங்கள்:

★ இங்கு முருகன் 11 தலை 22 கைகளுடன் அருள்பாலிக்கிறார்



 


No comments:

Post a Comment

Chettinadu Villages Venba

The Nagarathars(Chettiyaars) live in 76 villages in Tamil Nadu. 'Venpa' is sung about the Chettinad areas where they live. The Nagar...